இந்தியா
கொரோனா மூன்றாவது அலையில் ஏற்பட்ட 60 சதவீதம் பேர் உயிரிழப்பு இதனால்தான்- ஆய்வில் தகவல்
கொரோனா மூன்றாவது அலையில் நிகழ்ந்துள்ள இறப்புகளில் 60 சதவீதத்தினர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களும், இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளாதவர்களும்தான் என்று ஒரு ஆய்வுத்தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி:
நாடு கொரோனா தொற்றின் 3-வது அலையை எதிர்த்து போராடி வருகிறது. இந்த அலையில் ஆஸ்பத்திரி சேர்க்கைகள், இறப்புகள் குறைவாகவே இருக்கின்றன.
இந்த அலை தொடர்பாக டெல்லி மேக்ஸ் ஹெல்த்கேர் ஆஸ்பத்திரி ஒரு ஆய்வு நடத்தியது. கடந்த 20-ந்தேதி வரையில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-
* கொரோனா மூன்றாவது அலையில் நிகழ்ந்துள்ள இறப்புகளில் 60 சதவீதத்தினர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களும், இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளாதவர்களும்தான்.
* இறந்தவர்களில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் சிறுநீரக நோய்கள், இதய நோய்கள், நீரிழிவு, புற்றுநோய் உள்ளிட்ட இணை நோயுடன் போராடி வந்தவர்கள் ஆவார்கள்.
* எங்கள் ஆஸ்பத்திரியில் 82 பேர் இறந்துள்ளனர். 60 சதவீதம் பேர் தடுப்பூசி போடாதவர்கள் அல்லது முழுமையாக போடாதவர்கள் ஆவார்கள்.
* 41 சிறுவர், சிறுமியர் ஆஸ்பத்திரியில் கொரோனா மீட்பு சிகிச்சைக்கு சேர்ந்தனர். இந்த பிரிவில் இறப்பு இல்லை. 7 பேர் மட்டுமே தீவிர சிகிச்சை பிரிவிலும், 2 பேர் வென்டிலேட்டர் வசதியுடனும் சிகிச்சை பெற்றனர்.
* முதல் அலையில் இறப்பு விகிதம் 7.2 சதவீதம், இரண்டாவது அலையில் 10.5 சதவீதம். மூன்றாவது அலையில் 6 சதவீதம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கொரோனாவின் மூன்றாவது அலையில் இறப்புகள், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கும், இணைநோய்களுடன் போராடியவர்களுக்கும் நேர்ந்து இருப்பதை டெல்லி சுகாதார மந்திரி சத்யேந்தர் ஜெயினும் ஏற்கனவே குறிப்பிட்டது நினைவுகூரத்தக்கது.
இதையும் படியுங்கள்.... பாம்புகள் சூழ்ந்த நிலையில் வீட்டில் உயிரிழந்த நபர் குறித்து விசாரணை