இந்தியா
பட்டினி சாவை தடுக்க திட்டங்களை உருவாக்குங்கள்- மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்
இந்தியாவில் சமீபத்தில் நிகழ்ந்துள்ள பட்டினிச் சாவுகள் தொடர்பாக மாநில அரசுகள் தரும் தரவுகளை மத்திய அரசு சேகரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியது.
புதுடெல்லி:
பட்டினி சாவை தடுப்பதற்காக தேசிய அளவில் திட்டங்களை உருவாக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
சமுதாய உணவகங்களை அமைத்து பட்டினி சாவுகளை தடுக்க கோரி தொடரப்பட்ட பொது நல வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
இதை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது:-
விழுப்புரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் 5 வயது சிறுவன் உயிரிழந்தார். அவரது உடல் உடற்கூறாய்வு அறிக்கையில் குடலில் உணவு இல்லாததால் பட்டினி சாவு என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், நமது நாட்டில் பட்டினி சாவே இல்லை என எப்படி கூற முடியும்?
நமது நாட்டில் சமீபத்தில் நிகழ்ந்துள்ள பட்டினிச் சாவுகள் தொடர்பாக மாநில அரசுகள் தரும் தரவுகளை மத்திய அரசு சேகரிக்க வேண்டும். அதை ஆய்வு செய்து அறிக்கையாகச் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் பட்டினி சாவை தடுப்பதற்காக தேசிய அளவில் திட்டங்களை உருவாக்க வேண்டும். மாநிலங்களுக்கு கூடுதல் உணவு தானியங்களை வழங்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் மாநில அரசுகள் சமுதாய உணவகங்களை உருவாக்க வழிவகுக்கும்.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.