இந்தியா
கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் மணல் சிற்பம்
அரசு அறிவிக்கும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
பூரி:
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் பட்நாயக், இந்திய அளவில் மிக சிறந்த மணல் சிற்பக் கலைஞராக திகழ்கிறார். பல்வேறு சூழல்கள் குறித்த விழிப்புணர்வு சிற்பங்களை அவ்வவ்போது பல்வேறு கடற்கரைகளில் அவர் உருவாக்கி வருகிறார். இது மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக தற்போது ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் கொரோனா விழிப்புணர்வு மணல் சிற்பம் ஒன்றை அவர் வடிவமைத்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் அது குறித்து எச்சரிக்கும் வகையில், இந்த மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
கொரோனா மூன்றாவது அலையை தடுக்க மக்கள் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும், அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்பதை எடுத்துக் காட்டும் வகையிலும் அந்த மணல் சிற்பத்தில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் இந்த மணல் சிற்பம் வலியுறுத்துகிறது.