இந்தியா
இத்தாலியில் இருந்து விமானத்தில் இந்தியா வந்த 125 பேருக்கு கொரோனா
ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகள் விமான போக்குவரத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.
அமிர்தசரஸ்:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிவேகத்தில் பரவி வருகிறது. ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகள் விமான போக்குவரத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. இந்தியாவிலும், விமான பயணிகளுக்கு தீவிர பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் இத்தாலியில் இருந்து இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா விமானத்தில் வந்த பயணிகளில், 125 பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக அமிர்தசரஸ் விமான நிலைய இயக்குனர் கூறினார். இந்த தகவல் சுகாதாரத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதன்பின்னர் அமிர்தசரஸ் விமான நிலைய இயக்குனர், தான் முன்பு அறிவித்த தகவலை திருத்தி, அது இத்தாலியில் இருந்து இயக்கப்பட்ட ‘சர்வதேச சார்ட்டர்டு விமானம்’ என கூறினார். அந்த விமானத்தில் மொத்தம் 179 பேர் பயணித்ததாகவும், 125 பேர் பாதிக்கப்பட்டதாகவும் கூறினார். எனினும், ஏர் இந்தியா விமானம் தொடர்பான செய்தி வேகமாக பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட அனைவரும் முகாமுக்கு அனுப்பி தனிமைப்படுத்தப்பட உள்ளனர்.