இந்தியா
வாரணாசி, அயோத்தியில் மட்டுமே மோடியை காண முடியும்: ப. சிதம்பரம் விமர்சனம்
வாரணாசி, அயோத்தி போன்ற இடங்களில் மட்டுமே பிரதமர் மோடியை பார்க்க முடியும், பாராளுமன்றத்தில் அவரை காண முடியாது என ப. சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ந்தேதி டெல்லி பாராளுமன்றத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பாதுகாப்புப்படை வீரர்கள் உயிரிழந்தனர். பாராளுமன்றம் தாக்குதல் நினைவு தினத்தை முன்னிட்டு, உயிரிழந்த வீரர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கடந்த டிசம்பர் 13-ம் தேதி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
அன்றைய தினம் பிரதமர் மோடி தன் சொந்த தொகுதியான வாரணாசிக்கு இரண்டு நாள் பயணமாக சென்று அங்கு ரூ.339 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்டுள்ள காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தை திறந்து வைத்தார்.
மேலும், அங்கு காசி கங்கை நதியில் புனித நீராடினார். இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம், ‘பிரதமர் மோடிக்கு நம் நாட்டு பாராளுமன்றத்தின் மீது பெரும் மதிப்பு இருக்கிறது. அதனால்தான்
அவர் டிசம்பர் 13-ம் தேதி பாராளுமன்ற தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தாமல் வாரணாசிக்கு சென்றுள்ளார்.
மோடியை வாரணாசி, அயோத்தி போன்ற இடங்களில் மட்டும்தான் நம்மால் பார்க்க முடியும். பாராளுமன்றத்தில் அவரை காண்பது அரிது’ என விமர்சித்துள்ளார்.