இந்தியா
மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் ஒமைக்ரான் - பாதிப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்வு
நாடு முழுவதும் இதுவரை 133 கோடியே 79 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
உருமாற்றம் அடைந்த கொரோனோ வைரசான ஒமைக்ரான், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட இந்த வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது.
மகராஷ்டிரா மாநிலத்தில் இன்று மேலும் 2 பேருக்கு ‘ஒமைக்ரான்’ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. லத்தூரில் ஒருவருக்கும், புனேவில் ஒருவருக்கும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த மாநிலத்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே இன்று ஒரே நாளில் நாடு முழுவதும் இரவு 7 மணிவரை 60 லட்சத்து 49 ஆயிரத்து 911 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதன் மூலம் இதன் மொத்த எண்ணிக்கை 133 கோடியே 79 லட்சத்து, 69 ஆயிரத்து 484 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.