இந்தியா
மகாராஷ்டிராவில் மேலும் 2 பேருக்கு தொற்று- இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 23 ஆக உயர்வு
தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருவோருக்கு பரிசோதனை செய்யப்படுவதுடன், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.
ஜெய்ப்பூர்:
உலகம் முழுவதும் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வரும் ஒமைக்ரான் வைரஸ், இந்தியாவிலும் பரவத் தொடங்கியிருக்கிறது. இந்த உருமாறிய வைரஸ் கண்டறியப்பட்ட தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருவோருக்கு தீவிர பரிசோதனை செய்யப்படுகிறது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.
நேற்று வரை இந்தியாவில் 21 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மேலும் பலரது மாதிரிகள் பரிசோதனையில் உள்ளன.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் இன்று 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த 37 வயது நபர் மற்றும் அமெரிக்காவில் இருந்து வந்த அவரது நண்பர் என 2 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருப்பதாக மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட இருவருக்கும் நோய் அறிகுறி எதுவும் தென்படவில்லை. இருவரும் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள்.
இதன்மூலம் மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் பாதிப்பு 10 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 23 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.