செய்திகள்
ஜம்மு காஷ்மீர் எல்லை அருகே வெடித்து சிதறிய கண்ணிவெடி -2 ராணுவ வீரர்கள் பலி
எல்லைக்கு அப்பால் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவுவதை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ரோந்து சென்றபோது குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
ஜம்மு:
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இன்று ராணுவ வீரர்கள் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பாதையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. நவ்ஷேரா செக்டார் கலால் பகுதியில் உள்ள ராணுவ முன்கள நிலை அருகே நடந்த இந்த குண்டுவெடிப்பில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயமடைந்தார்.
எல்லைக்கு அப்பால் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவுவதை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ரோந்து சென்றபோது குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், ஊடுருவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அப்பகுதியில் ராணுவத்தால் புதைக்கப்பட்ட ஏராளமான கண்ணிவெடிகள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.