செய்திகள்
முப்படை தலைவர் பிபின் ராவத்

பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்தால் காஷ்மீரில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் - பிபின் ராவத்

Published On 2021-10-24 19:47 GMT   |   Update On 2021-10-24 19:47 GMT
காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து வெளி மாநிலத்தவர் வெளியேறுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என முப்படை தலைவர் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
கவுகாத்தி:

ஜம்மு காஷ்மீரில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிறுபான்மையினர் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் என அப்பாவி பொதுமக்களை பயங்கரவாதிகள் கொன்று குவித்து வருகின்றனர். இதற்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில், கவுகாத்தியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முப்படை தலைவர் பிபின் ராவத் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

காஷ்மீரில் எப்போதெல்லாம் அமைதியும், நிலைத்தன்மையும் நிலவுகிறதோ, அப்போதெல்லாம் அங்கு சில பிரிவினரைக் கொன்று ஒரு பதற்றமான சூழலை நமது மேற்கு பகுதி எதிரி (பாகிஸ்தான்) உருவாக்குகிறது. காஷ்மீரின் அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் மறைமுக போரை பாகிஸ்தான் நிகழ்த்துகிறது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து வெளி மாநிலத்தவர் வெளியேறுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். நம்மை ஒரு வலையில் விழ வைக்க எதிரி எப்போதும் ஏதாவது செய்ய முயற்சிப்பார். அங்கு பாதுகாப்பு படையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கையை மக்களிடையே ஏற்படுத்துவதற்கு உள்துறை மந்திரி அமித்ஷா காஷ்மீர் சென்றுள்ளார்.

ஆயுதப் படைகள் ஊடுருவி வருவதை மக்கள் விரும்புவதில்லை. பயங்கரவாதிகள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய நாம் மீண்டும் இந்த நிலைக்கு திரும்பி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். காஷ்மீரில் படிப்படியாக அமைதி திரும்புகிறது. ஆனால் சமீபத்திய சம்பவங்கள் பள்ளத்தாக்கு பகுதியை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு தள்ளுகின்றன.அங்கு பயங்கரவாத சம்பவங்கள் தொடர்ந்தால் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News