செய்திகள்
ஜம்மு-காஷ்மீர் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரியங்கா
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அடிக்கடி துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடைபெற்று வரும் நிலையில், மக்களை பாதுகாக்க வேண்டும் என பிரியங்கா கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகர் பகுதிகளில் அடிக்கடி அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி வரும் சம்பவம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று காலை ஸ்ரீநகரில் உள்ள மிகவும் பழமையான நகரமான ஈத்கா-வில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் இரண்டு ஆசிரியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. அதன்பின் மத்திய அரசு தலைமையில் துணைநிலை ஆளுநர் தலைமையில் அரசு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் மக்களை மத்திய அரசு பாதுகாப்பதை உறுதி செய்ய வேண்டும் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரியங்கா காந்தி கூறுகையில் ‘‘நம்முடைய காஷ்மீர் சகோதரிகள், சகோதரர்கள் கொலை செய்யப்பட்டடு வரும் சம்பவம் அதிகரித்து வருவது வலியை ஏற்படுத்துகிறது. தாக்குதல் சம்பவம் கண்டனத்திற்குரியது. நாம் கடினமான இந்த நேரத்தில் அவர்களுடன் இருக்க வேண்டும்.
மத்திய அரசு ஜம்மு-காஷ்மீர் மாநில மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.