செய்திகள்
எம்பியாக தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை பெற்றுக்கொண்ட எல்.முருகன்

மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக எல்.முருகன் தேர்வு

Published On 2021-09-27 11:14 GMT   |   Update On 2021-09-27 12:27 GMT
மத்திய இணை மந்திரி எல்.முருகன் மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அதிகாரி வழங்கினார்.
போபால்:

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டபோது தமிழகத்தின் பாஜக தலைவராக இருந்த எல்.முருகனுக்கு மத்திய இணை மந்திரி பொறுப்பு வழங்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினராக இல்லாத ஒருவர் 6 மாதங்கள் மட்டுமே பதவி வகிக்க முடியும் என்பதால், எல்.முருகன் ஏதேனும் ஒரு மாநிலத்தில் இருந்து எம்.பியாக தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. 

இதற்கிடையே, மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, மத்திய மந்திரியாக பதவி வகித்து வந்த தாவர்சந்த் கெலாட் கர்நாடக மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். அதையடுத்து அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததால், அந்த இடம் காலியானது. அந்த இடத்துக்கு அடுத்த மாதம் 4-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில், பா.ஜ.க. வேட்பாளராக எல்.முருகனை தேர்வு செய்து கட்சி தலைமை அறிவித்தது. அதன்படி கடந்த 21ம் தேதி மத்திய பிரதேசம் சென்ற எல்.முருகன், வேட்பு மனு தாக்கல் செய்தார். வேறு யாரும் போட்டியிடாத நிலையில், எல்.முருகன் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. அவர் எம்பியாக தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அதிகாரி வழங்கினார். 

எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட எல்.முருகனுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
Tags:    

Similar News