செய்திகள்
மத பிரச்சினையை தூண்டும் வகையில் வைரலாகும் பகீர் தகவல்
அசாம் மாநிலத்தில் கூட்டத்தினர் கடுமையாக தாக்கிய நபர் அந்த மதத்தை சேர்ந்தவர் இல்லை என தெரியவந்துள்ளது.
அசாம் மாநிலத்தின் தின்சுகியா மாவட்டத்தில் மாடு திருடியதாக நினைத்து பொது மக்கள் ஒன்றிணைந்து நபர் ஒருவரை சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவம் மத பிரச்சினையை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் இந்துத்துவா கும்பல் முஸ்லீம்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது எனும் தலைப்பில் தனியார் செய்தி நிறுவனம் பதிவிட்ட செய்தி தொகுப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், அந்த சம்பவத்தில் தாக்கப்பட்ட நபர் இந்து மதத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து வெளியான பல்வேறு செய்திகளில் சம்பவத்தில் தாக்கப்பட்ட நபர் சரத் மோரன் என்றே குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் தாக்கப்பட்ட நபர் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர் என எந்த செய்தி தொகுப்பிலும் குறிப்பிடப்படவில்லை.
உண்மையில் இந்த சம்பவத்திற்கும் மதவாத தாக்குதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என உறுதியாகிவிட்டது. இதே தகவலை தின்சுகியா காவல் துறை அதிகாரியும் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.