புயல் பாதித்த மேற்குவங்காளம், ஒடிசாவில் கொரோனா மேலும் பரவும் அபாயம்
கொல்கத்தா:
வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ‘யாஸ்’ புயல் நேற்று ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தை தாக்கியது.
இதில் இரு மாநிலங்களிலுமே கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. 3 லட்சம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. அவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே இரு மாநிலங்களிலும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் மேற்கு வங்காளம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புயல் தாக்கி இருப்பதால் பாதிக்கப்பட்ட மக்கள் கூட்டமாக ஒரே இடத்தில் தங்கி இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சமூக இடைவெளியை பின்பற்றுவது கடினம்.
இதன் காரணமாக கொரோனா தொற்று மேலும் பரவலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பு பணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
யாஸ் புயலால் இரு மாநிலங்களிலும் அதிகளவில் மழை பெய்து வெள்ளக்காடாக மாறி இருக்கிறது. இதனாலும் வேறு தொற்று நோய்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.
எனவே இரு மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளன. மத்திய அரசும் தேவையான உதவிகளை அளித்து வருகிறது.