செய்திகள்
காலதாமதம் என்பதை வீணாக்கப்பட்டது என்று மத்திய அரசு அழைக்கிறது: சத்தீஸ்கர் மாநில மந்திரி
இந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், பெரும்பாலான மாநிலங்கள் அதிக அளவில் வீணாக்குகிறது என்று மத்திய அரசு தெரிவித்து வருகிறது.
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதியில் இருந்து தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஒரு குப்பியில் 10 டோஸ் இருக்கும் எனில், அத்தனை டோஸ்களையும் 4 மணி நேரத்திற்குள் செலுத்திவிட வேண்டும். அதாவது ஒரு குப்பியை திறந்து ஒருவருக்கு செலுத்தபின், அந்த குப்பியை 4 மணி நேரத்திற்குப்பின் பின் பாதுகாத்து வைக்க இயலாது. ஒருவருக்கு செலுத்திய பின் நான்கு மணி நேரம் வேறு யாருக்கும் செலுத்தவில்லை எனில், மீதமுள்ள 9 டோஸ்கள் வீணாக சென்றுவிடும்.
தடுப்பூசி போடும் பணி தொடங்கும்போது பெரும்பாலானோர் அச்சத்தின் காரணமாக தடுப்பூசி போட செல்லவில்லை. இதனால் அதிக அளவில் டோஸ்கள் விரயம் ஆனது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வீணாகும் சதவீதம் குறைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் சுகாதாரத்துறை மந்திரி டிஎஸ் சிங் தியோ கூறுகையில் ‘‘மத்திய அரசு புதிதாக போர்டல் உருவாக்கி, தடுப்பூசி மையத்தில் இருந்து நேரடியாக தரவுகளை பெற்று வருகிறது. மாநில அரசுகளிடம் இருந்து தகவல்களை பெறவில்லை. சில தடுப்பூசி மையங்களில் இருந்து தடுப்பூசி போட்டதற்கான தரவுகள் மத்திய அரசுக்கு காலதாமதமாக கிடைக்கிறது. இதை வீணாக சென்ற தடுப்பூசி டோஸ்கள் என்று மத்திய அரசு அழைக்கிறது.
சரியான தரவுகள் இல்லாமல் அவர்கள் வீணாக்கப்பட்டது என்று அழைக்கிறார்கள். அவர்கள் மாநில அரசை நம்ப வில்லை என்றால், அவர்களுடய குழுவை அனுப்பலாம். அவர்களுடைய நோக்கம் சரியானதற்கானது அல்ல. அரசியல் சார்ந்ததாக உள்ளது’’ என்றார்.