செய்திகள்
டெல்லியில் வெகுவாக குறைந்தது கொரோனா தினசரி பாதிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் 4524 பேர் பாதிப்பு
டெல்லியில் அக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கைகள் தட்டுப்பாடு என செய்திகள் தொடர்ந்து வந்த நிலையில், தற்போது கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த சில நாட்களுக்கு முன் தலைவிரித்தாடியது. இதனால் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகள் இல்லாமல் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தடுமாற்றம் அடைந்தனர்.
இதனால் உயிரிழப்பு அதிகமாகும் மோசமான நிலை ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையிட்டன. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் மத்திய அரசை வலியுறுத்தினார்.
மத்திய அரசு, மாநில அரசு, மருத்துவமனைகள் அனைத்தும் ஒன்றிணைந்து சிறப்பாக செயல்பட ஆக்சிஜன் தட்டுப்பாடு சரி செய்யப்பட்டது. அத்துடன் கொரோனா பாதிப்பும் குறைய ஆரம்பித்தது. 20 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம், 10 ஆயிரம் என குறைந்த கொரோனா பாதிப்பு, கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4524 ஆக உள்ளது.
அதேவேளையில் ஆறுதல் அளிக்கும் விதமாக 10,918 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், 340 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லியில் இதுவரை 13,98,391 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 13,20,496 பேர் குணமடைந்துள்ளனர். 21,846 பேர் உயிரிழந்துள்ளனர். 56,049 பேர் இன்னும் சிக்சை பெற்று வருகிறார்கள்.
தற்போது மகாராஷ்டிரா, டெல்லி, உ.பி. போன்ற பட மாநிலங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைய ஆரம்பித்துள்ளது.