செய்திகள்
கோப்புப்படம்

மகாராஷ்டிராவில் கொரோனாவை வென்ற 103 வயது முதியவர்

Published On 2021-05-09 22:18 GMT   |   Update On 2021-05-09 22:18 GMT
மகாராஷ்டிராவில் 103 வயது முதியவர் ஒருவர் கொரோனாவை வென்று இளைய தலைமுறைக்கு நம்பிக்கையூட்டி உள்ளார்.
பால்கர்:

கொரோனா 2-வது அலை நாட்டை நரகமாக்கி வருகிறது. நோய் பாதிப்பில் இருந்து மீளமுடியாமல் இளம் வயதினரும் பலியாகி வருகின்றனர். இந்தநிலையில் மகாராஷ்டிரா மாநிலம் பால்கரை சேர்ந்த 103 வயது முதியவர் கொரோனா தடையை தகர்த்து நோயில் இருந்து குணமடைந்து இளைய தலைமுறைக்கு நம்பிக்கையூட்டி உள்ளார்.

பால்கரில் உள்ள விரேந்திர நகர் பகுதியை சேர்ந்த முதியவர் சாம்ராவ் இங்கலே. 103 வயதான இவருக்கு சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து இவர் தனது கிராமத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார். வயது மூப்பு காரணமாக அவரால் நோயில் இருந்து மீளமுடியுமா என்ற சந்தேகம் குடும்பத்தினருக்கு ஏற்பட்டது. இருப்பினும் துவண்டுபோகாத முதியவர் தனக்கு வழங்கப்பட்ட சிகிச்சையை உளமார ஏற்றுக்கொண்டார். மேலும் மருத்துவர்கள் செவிலியர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தார். இதன் பலனாகவும், அவர் மன தைரியத்தின் காரணமாகவும் கொரோனா நோயுடனான போராட்டத்தில் வெற்றி பெற்று பூரண குணமடைந்தார். இதைத்தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் வீடு திரும்பினார்.

புன்னகை தவழும் முகத்துடன் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறிய அவருக்கு பால்கர் மாவட்ட கலெக்டர் டாக்டர் மானிக் குர்சால் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் மலர்களை கொடுத்து வாழ்த்து கூறினர்.

Tags:    

Similar News