செய்திகள்
கோவேக்சின் தடுப்பூசிக்கான விலையை நிர்ணயித்தது பாரத் பயோடெக்
மத்திய அரசின் கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு கோவேக்சின் மருந்து ஒரு டோஸ் 150 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.
ஐதராபாத்:
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த மருந்துகளுக்கான விலையை நிர்ணயம் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி சமீபத்தில் கோவிஷீல்டு மருந்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்நிலையில், கோவேக்சின் தடுப்பூசிக்கான விலையை, அதன் தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் நிர்ணயம் செய்துள்ளது. அரசு மருத்துவமனைக்கு ஒரு டோஸ் 600 ரூபாய், தனியார் மருத்துவமனைகளுக்கு 1200 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான விலை 15 முதல் 20 டாலர் வரை (இந்திய ரூபாய் மதிப்பில் 1123 முதல் 1498 வரை) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு கோவேக்சின் மருந்து ஒரு டோஸ் 150 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. அந்த மருந்தை மத்திய அரசு மக்களுக்கு இலவசமாக வழங்குகிறது.