செய்திகள்
இமாச்சல பிரதேச முன்னாள் முதல் மந்திரிக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சிம்லா:
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், இமாச்சல பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி வீரபத்ர சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். முன்னதாக, வீரபத்ர சிங்கின் மகனும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வுமான விக்ரமாதித்ய சிங்கிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனா உறுதியானது.
இதையடுத்து, அவரது வீட்டில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 86 வயதான வீரபத்ர சிங்கிற்கு கொரோனா பரவி இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால், மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.