செய்திகள்
திருப்பதி கோவில்

திருப்பதியில் நாளை முதல் இலவச தரிசனம் ரத்து

Published On 2021-04-11 11:10 GMT   |   Update On 2021-04-11 11:10 GMT
கொரோனா 2-வது அலையால் இலவச தரிசனம் ரத்து மற்றும் கட்டுப்பாடுகளால் கடந்த 2 நாட்களாக பக்தர்கள் வருகை குறைந்துள்ளது. உண்டியல் வருமானமும் சரிந்துள்ளது.

திருமலை:

கொரோனா பரவல் 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் திருப்பதி தேவஸ்தானம் முக்கிய முடிவு எடுத்துள்ளது.

அதன்படி திருப்பதியில் நாளை (திங்கட்கிழமை) முதல் இலவச தரிசனத்தை ரத்து செய்துள்ளது. திருப்பதிக்கு வரும் பக்தர்கள் இதனை கருத்தில் கொண்டு தரிசனத்திற்கு வரவேண்டும்.

ரூ.300 கட்டண தரிசனம், வி.ஐ.பி. தரிசன பக்தர்கள் மற்றும் ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்த பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

கொரோனா முதல் அலை ஊரடங்கின் போது திருப்பதியில் உண்டியல் வருமானம் வெகுவாக குறைந்தது. தளர்வுக்கு பின்னர் உண்டியல் வருமானம் ரூ.2 கோடியை தாண்டி ரூ.3 கோடி அளவுக்கு உயர்ந்தது.

இந்த நிலையில் கொரோனா 2-வது அலையால் இலவச தரிசனம் ரத்து மற்றும் கட்டுப்பாடுகளால் கடந்த 2 நாட்களாக பக்தர்கள் வருகை குறைந்துள்ளது. உண்டியல் வருமானமும் சரிந்துள்ளது.

திருப்பதியில் நேற்று முன்தினம் 39,055 பக்தர்கள் தரிசனம் செய்தனர். ரூ.1.75 கோடி உண்டியல் வசூலானது. நேற்று 49.754 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். ரூ.1.91 கோடி உண்டியல் வசூலாகியுள்ளது.

இந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து அனைவரும் குணமடைய வேண்டி திருமலையில் உள்ள நாதநீராஜன மண்டபத்தில் 12-வது கட்டமாக சுந்தரகாண்ட பாராயணம் படிக்கப்பட்டது.

இதில் தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News