செய்திகள்
வங்காளதேசத்தின் வளர்ச்சிப் பயணத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம் -மோடி
வங்காளதேசத்துடனான நமது நட்புறவானது, அண்டை நாடுகளுக்கே முன்னுரிமை என்ற நமது கொள்கையின் முக்கிய தூண் ஆகும் என பிரதமர் மோடி கூறி உள்ளார்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக நாளை வங்காளதேச நாட்டிற்கு செல்கிறார். வங்காளதேச சுதந்திர தினத்தின் 50-வது ஆண்டு விழா மற்றும் பங்கபந்துவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் மோடி கவுரவ விருந்தினராக கலந்து கொள்கிறார்.
இந்த சுற்றுப்பயணம் குறித்து பிரதமர் மோடி இன்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பின்பேரில், மார்ச் 26 மற்றும் 27 ஆகிய நாட்கள் வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன். கொரோனா தொற்று பரவத் தொடங்கியபிறகு எனது முதல் வெளிநாட்டு பயணமாக அண்டை நாட்டிற்கு செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது. வங்காளதேசத்துடன் இந்தியா ஆழ்ந்த கலாச்சார, மொழியியல் மற்றும் மக்களிடையிலான உறவுகளைப் பகிர்ந்து கொள்கிறது.
வங்காளதேசத்துடனான நமது நட்புறவானது, அண்டை நாடுகளுக்கே முன்னுரிமை என்ற நமது கொள்கையின் முக்கிய தூண் ஆகும். இதனை மேலும் வலுப்படுத்தி பன்முகப்படுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம். பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் வங்காளதேசத்தின் குறிப்பிடத்தக்க வளர்ச்சிப் பயணத்திற்கு நாம் தொடர்ந்து ஆதரவளிப்போம்.
இவ்வாறு மோடி கூறி உள்ளார்.