செய்திகள்
ஜம்மு காஷ்மீர் வனப்பகுதியில் பயங்கர ஆயுதங்கள் சிக்கின- ராணுவம் அதிரடி வேட்டை
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்து நாசவேலைகளில் ஈடுபடும் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் ராணுவம் மற்றும் மாநில காவல்துறை இணைந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கையில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள் மற்றும் எல்லைப்பகுதியில் பாகிஸ்தானை நோக்கி தோண்டப்பட்ட சுரங்கப் பாதைகள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
அவ்வகையில், ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டம் கவாஸ் பிராந்தியத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கத்யோக் வனப்பகுதியில் நடைபெற்ற தேடுதல் வேட்டையின்போது, மலையடிவாரத்தில் உள்ள ஒரு குகையில் பயங்கரவாதிகள் தங்கி இருந்ததற்கான தடயங்கள் கிடைத்தன. பயங்கரவாதிகள் விட்டுச் சென்ற துப்பாக்கிகள், மேகசின்கள் மற்றும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.