செய்திகள்
கைது

செம்மரம் வெட்ட அழைத்து செல்லப்பட்ட 17 தமிழக கூலித் தொழிலாளர்கள் கைது

Published On 2021-01-29 09:19 GMT   |   Update On 2021-01-29 09:19 GMT
உரமூட்டை லாரியில் செம்மரம் வெட்ட அழைத்து செல்லப்பட்ட 17 தமிழக கூலித் தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய 25 பேரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருமலை:

செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப்படை டி.ஐ.ஜி. கிராந்திராணா டாடா தலைமையிலான போலீசார் செம்மரக் கடத்தலைத் தடுப்பதற்காக சித்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சந்திரகிரி அடுத்த பனப்பாக்கம் வனப்பகுதியில் டி.எஸ்.பி. வெங்கடய்யா தலைமையில் போலீசார் மற்றும் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, வனப்பகுதிக்கு மெரவப்பள்ளி கிராமம் வழியாக ஒரு லாரி சென்றது.

அந்த லாரியை போலீசார் நிறுத்த முயன்றனர். போலீசாரை பார்த்ததும் லாரியில் இருந்த ரகசிய அறையின் வழியாக உர மூட்டைக்கு பின்னால் மறைந்திருந்த கடத்தல்காரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் தப்பி ஓடினர்.

தொடர்ந்து போலீசார் லாரியை மடக்கி பிடித்து அதில் இருந்த தமிழகத்தை சேர்ந்த 17 கூலித்தொழிலாளர்களை கைது செய்தனர்.

மேலும், லாரியை சோதனை செய்தபோது வனப்பகுதிக்கு செம்மரம் வெட்ட செல்லக்கூடிய கடத்தல்காரர்களுக்கு ஒரு வாரத்திற்குத் தேவையான உணவுப்பொருட்களும் கொண்டு செல்வது தெரிந்தது.

அவற்றை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பி ஓடிய 25-க்கும் மேற்பட்டவர்களை பிடிப்பதற்காக ரெயில் நிலையம், பஸ் நிலையம் மற்றும் வனப்பகுதியை ஒட்டியுள்ள சுற்றுப்புற கிராமங்களில் போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.


Tags:    

Similar News