செய்திகள்
வாக்காளர் அட்டை

டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை - தேர்தல் ஆணையம் நாளை அறிமுகம் செய்கிறது

Published On 2021-01-23 22:38 GMT   |   Update On 2021-01-24 01:02 GMT
டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் ஆணையம் நாளை அறிமுகம் செய்கிறது.
புதுடெல்லி:

தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கு இன்னும் 2 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே தொடங்கி விட்டது. இதற்கு முன்பு இல்லாத சில புதிய யுக்திகளை இந்த தேர்தலில் பயன்படுத்த தேர்தல் கமிஷன் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. அதில் ஒன்று டிஜிட்டல் முறையிலான வாக்காளர் அடையாள அட்டை.

கொரோனா பரவல் காரணமாக, பல்வேறு பணிகள் தற்போது மின்னணு முறையிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விமான நிலையம், சுங்கச்சாவடிகள் உள்ளிட்ட பல நுழைவு இடங்களில் டிஜிட்டல் முறையிலான ஆவணங்களே தற்போது பயன்படுத்தப்படுகிறது. இதைப்போல வாக்குச்சாவடிகளிலும் டிஜிட்டல் முறையிலான மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை வாக்காளர்கள் பயன்படுத்துவதற்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை, தேசிய வாக்காளர் தினமான நாளை அறிமுகம் செய்ய இருப்பதாக தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் இடம் பெற புதிதாக விண்ணப்பித்த வாக்காளர்களுக்கு இது கிடைக்கும். அவர்கள் தங்களது செல்போன் எண்ணை விண்ணப்பத்தில் பதிவுசெய்து இருக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம் பெற்றுள்ள, செல்போன் எண்ணை பதிவுசெய்த பழைய வாக்காளர்களுக்கு பிப்ரவரி 1-ம் தேதி முதல் மின்னணு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள வலைத்தளங்களில் அவர்கள் இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த மின்னணு அட்டையில் வாக்காளரின் பெயர், வரிசை எண், பாகம் எண், புகைப்படம் இடம் பெற்றிருக்கும். ‘கியூ ஆர் கோடு’ பயன்பாட்டை கொண்டதாக அந்த அட்டை இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதை செல்போனில் பதிவிறக்கம் செய்து சேமித்துக்கொள்ளலாம்.
Tags:    

Similar News