செய்திகள்
பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுத்தால் கடும் நடவடிக்கை: மந்திரி பசவராஜ் பொம்மை எச்சரிக்கை
விவசாயிகளுக்கு ஆதரவாக நடக்கும் முழு அடைப்பு போராட்டத்தில் பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மந்திரி பசவராஜ் பொம்மை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரு :
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். அதன்படி கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. முழு அடைப்பை ஒட்டி பெங்களூரு உள்பட கர்நாடக மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கையாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து பெங்களூருவில் நேற்று போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்தவித பாரபட்சமும் பார்க்காமல் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்