செய்திகள்
அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை
கொரோனா நிலவரம் குறித்து அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
நாடு முழுவதும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக மாநிலங்களுக்கு பல்வேறு உதவிகளும் வழங்கி வருகிறது.
குறிப்பாக கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி அடிக்கடி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டங்களில் மாநிலங்களின் கொரோனா நிலவரம் குறித்து கேட்டறியும் அவர், அவற்றில் இருந்து மக்களை மீட்பதற்கான வழிமுறைகளையும் மாநிலங்களுக்கு வழங்கி வருகிறார்.
அந்த வகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) மீண்டும் அவர் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்-மந்திரிகள் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தடுப்பூசி வினியோகிக்கும் திட்டம் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.
நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்று குறைய தொடங்கினாலும், வட மாநிலங்களின் பல நகரங்களில் தொற்று அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.