செய்திகள்
பிரதமர் மோடி, மாணவி தேவிகா

இமாசல பிரதேச பாடலை பாடிய கேரள மாணவிக்கு மோடி பாராட்டு

Published On 2020-10-10 19:52 GMT   |   Update On 2020-10-10 19:52 GMT
இமாசல பிரதேச பாடலை பாடிய கேரள மாணவி தேவிகாவின் பாடல் வீடியோவை பிரதமர் மோடி டுவிட்டரில் பகிர்ந்து அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
கொச்சி:

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் தேவிகா என்கிற மாணவி இமாசலபிரதேச மாநிலத்தின் பிரபலமான ஒரு பாடலை பாடி அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். மாணவியின் இனிமையான குரல் இணையதள ஆர்வலர்களை வெகுவாக கவர்ந்தது. லட்சக்கணக்கானோர் அந்த மாணவியின் வீடியோவை பார்த்தனர்.

இதையடுத்து இமாசலபிரதேச மாநில முதல்-மந்திரி ஜெய்ராம் தாகூர் கேரள மாணவியின் வீடியோவை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து, மாநிலத்தின் ஒட்டுமொத்த இதயங்களையும் மாணவி வென்று விட்டதாக பாராட்டு தெரிவித்தார். மேலும் மாணவி தேவிகாவை இமாசலபிரதேச மாநிலத்துக்கு வருமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில் கேரள மாணவி தேவிகாவின் பாடல் வீடியோவை பிரதமர் மோடி டுவிட்டரில் பகிர்ந்து அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பதிவில் “நான் தேவிகாவை கண்டு பெருமைபடுகிறேன் அவரது மெல்லிசை குரல் “ஒரு இந்தியா, சிறந்த இந்தியா” என்ற சாரத்தை பலப்படுத்துகிறது“ என மலையாள மொழியில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே தனது பாடலை ரசித்ததற்காக மாணவி தேவிகா பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News