செய்திகள்
கொரோனா பரிசோதனை

கொரோனா பரிசோதனையில் உலக சுகாதார அமைப்பின் ஆலோசனையை நிறைவேற்றிய இந்தியா

Published On 2020-10-08 09:41 GMT   |   Update On 2020-10-08 09:41 GMT
உலக சுகாதார அமைப்பு கொரோனா பரிசோதனைகள் பற்றி வழங்கிய ஆலோசனையை இந்தியா நிறைவேற்றியிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

இந்திய மக்கள் தொகை அடிப்படையில் நாளொன்றுக்கு 10 லட்சம் பேரில் 140 பேருக்கு கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுரை வழங்கியிருந்தது. 

இந்நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இதுபற்றி இன்று வெளியிட்டுள்ள செய்தியில், ‘கொரோனா பரிசோதனைகளில் தேசிய சராசரியானது நாளொன்றுக்கு 10 லட்சம் பேரில் 865 பேருக்கு என்ற அளவில் உள்ளது. இது உலக சுகாதார அமைப்பு கூறிய எண்ணிக்கையை விட 6 மடங்கு அதிகம். இதன்மூலம் உலக சுகாதார அமைப்பின் ஆலோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நாளொன்றுக்கு 10 லட்சம் பேரில் 140 பேருக்கு மேல் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.  இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 78,524 பேருக்கு புதிய பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.

எனினும், நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 83,011 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.  10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புதிய குணமடைந்தோர் விகிதம் 75% ஆகவும், புதிய பாதிப்புகள் 79% ஆகவும் உள்ளது’ என தெரிவித்து உள்ளது.

கடந்த 3 வாரங்களில் தேசிய மொத்த கொரோனா பாதிப்பு விகிதமும் சரிந்துள்ளது.  இது 8.19% ஆக உள்ளது.  இதுதவிர 7  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 5%க்கும் குறைவாக கொரோனா பாதிப்பு விகிதம் உள்ளது.  22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் தேசிய சராசரியை விட குறைவாக உள்ளது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
Tags:    

Similar News