செய்திகள்
கேரளாவில் நேற்று ஒரே நாளில் இரண்டு மந்திரிகளுக்கு கொரோனா
கேரள உயர்கல்வித்துறை மந்திரி மற்றும் மின்சாரத்துறை மந்திரிக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் ஆரம்பத்தில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் தற்போது பயங்கரவ வேகமாக பரவி வருகிறது. கொரோனா வேகமாக பரவும் தென்மாநிலங்கள் பட்டியலில் கேரளா முன்னிலையில் உள்ளது.
அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்து 606 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 53 ஆயிரத்து 405 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 92 ஆயிரத்து 161 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து நேற்று 6 ஆயிரத்து 161 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 60 ஆயிரத்து 243 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அம்மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 906 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நேற்று ஒரே நாளில் கேரளாவை சேர்ந்த இரண்டு மந்திரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவையில், உயர்கல்வித்துறை மந்திரியாக செயல்பட்டு வரும் கேடி ஜலீல் மற்றும் மின்சாரத்துறை மந்திரியான எம்எம் மணி ஆகிய இரு மந்திரிகளுக்கும் நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, கோரோனாவால் பாதிக்கப்பட்ட உயர்கல்வித்துறை மந்திரி கேடி ஜலீல் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ள நிலையில், மின்சாரத்துறை மந்திரியான எம்எம் மணி திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மந்திரிகள் 2 பேருக்கு புதிதாக கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதால் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவையில் கொரோனா பரவிய மந்திரிகளின் மொத்த எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.