செய்திகள்
கொரோனா தடுப்பூசி

ரஷியா கண்டுபிடித்த ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்தியாவில் நவம்பரில் கிடைக்க வாய்ப்பு

Published On 2020-09-18 06:16 GMT   |   Update On 2020-09-18 06:50 GMT
ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்தியாவில் நவம்பர் மாதம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி:

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டதாக ரஷியா அறிவித்தது. ஸ்புட்னிக்-வி என்று பெயரிடப்பட்ட அந்த தடுப்பூசியை ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகமும், கமலேயா தேசிய தொற்று நோயியல் மற்றும் நுண்ணுயிரியல் நிறுவனமும் இணைந்து உருவாக்கி உள்ளன.இந்த தடுப்பூசி ரஷியாவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி 3-ம் கட்ட சோதனையை முழுமையாக முடிக்காமலேயே பயன் பாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில் அந்த தடுப்பூசி பாதுகாப்பானது, செயல் திறன் மிக்கது என்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதையடுத்து ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை வாங்க பல்வேறு நாடுகள் ரஷியாவுடன் ஒப்பந்தங்களை செய்து வருகின்றன.

இதற்கிடையே ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் 10 கோடி டோஸ்களை இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்காக ஐதராபாத்தை தலைமையகமாக கொண்டுள்ள பிரபல மருந்து நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரிசும் ரஷிய நேரடி முதலீட்டு நிதியமும் ஒப்பந்தம் செய்துள்ளன.

ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு இந்தியாவில் ஒழுங்குமுறை ஒப்பந்தம் பெற்றதும் ரெட்டிஸ் லேபரட்டிசுக்கு ரஷியா 10 கோடி தடுப்பூசி டோஸ்களை வினியோகம் செய்யும். தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனை வெற்றிகரமக முடிந்து இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் பதிவை பெற்றதும் தடுப்பூசி வினியோகம் நடப்பாண்டிலேயே இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தநிலையில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்தியாவில் நவம்பர் மாதம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து ரஷிய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைமை செயல் அதிகாரி கிரில் டிமிட்ரிவ் கூறும்போது,

‘இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து நவம்பர் மாதத்தில் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை தயாரித்து கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியா மிக முக்கிய பங்களிப்பை வழங்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது’ என்றார்.

டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரிஸ் நிர்வாக இயக்குனர் ஜி.வி. பிரசாத் கூறியதாவது:-

ரஷியாவில் கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்ய மருந்து கட்டுப்பாடு இயக்குனரகத்திடம் அனுமதி கேட்டிருக்கிறோம். ரஷியா தான் முதலில் கொரோனா தடுப்பு மருந்தை வழங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News