செய்திகள்
கோப்புப்படம்

5 ஆயிரம் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைரலாகும் தகவல்

Published On 2020-09-01 04:07 GMT   |   Update On 2020-09-01 04:07 GMT
கர்நாடக மாநிலத்தில் 5 ஆயிரம் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைரலாகும் பகீர் தகவல்.

கர்நாடக மாநிலத்தில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மருத்துவம், பொறியியல், பல் மருத்துவம் ஆகிய படிப்புகளில் சேர, கோமெட்கே என்ற பெயரில், ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்வாகும் மாணவர்களுக்கு, தனியார் மற்றும் அரசு கல்லூரிகளில் படிக்க இடம் கிடைக்கிறது.

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான கோமெட்கே தேர்வில் கலந்து கொண்டவர்களில் சுமார் 5 ஆயிரம் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இத்துடன் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தார் என 57 பேர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என கூறப்படுகிறது.

வைரலாகும் பகீர் தகவல் தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொகுப்பு போன்றே காட்சியளிக்கிறது. இதே போன்று கர்நாடகாவில் சிஇடி தேர்வில் கலந்து கொண்டவர்களில் 19 பேருக்கு கொரோனாவைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மற்றொரு செய்தி நிறுவனம் வெளியிட்டதாக ஸ்கிரீன்ஷாட் ஒன்றும் வைரலாகி வருகிறது.



வைரல் தகவல்களை ஆய்வு செய்ததில் அவை போலியானவை என தெரியவந்துள்ளது. இதுபற்றிய இணைய தேடல்களில் கோமெட்கே தேர்வில் மாணவர்கள் கலந்து கொண்டது பற்றியோ, அவர்களுக்கு கொரோனாவைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது பற்றியோ எவ்வித தகவலும் கிடைக்கப்பெறவில்லை.

இதனால், கர்நாடக மாணவர்களுக்கு கொரோனாவைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறும் தகவலில் துளியும் உண்மையில்லை என்பது உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News