செய்திகள்
துப்பாக்கியை காட்டி மிரட்டிய முன்னாள் அமைச்சர்

தெலுங்கானா: துப்பாக்கியை காட்டி காண்ட்ராக்டர், ஜேசிபி டிரைவரை மிரட்டிய முன்னாள் அமைச்சர்

Published On 2020-08-31 05:41 GMT   |   Update On 2020-08-31 05:41 GMT
தெலுங்கானாவில் முன்னாள் அமைச்சர் ஒருவர் துப்பாக்கியை காட்டி உள்ளூர் காண்ட்ராக்டர் மற்றும் ஜேசிபி டிரைவரை மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் உருமால்டா கிராமத்தில் கால்வாய் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில் முன்னாள் அமைச்சர் குட்டா மோகன் ரெட்டியின் நிலமும் கையகப்படுத்தப்பட்டு, அதற்கான இழப்பீட்டு தொகை அரசால் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ரெட்டியின் நிலத்தில் கால்வாய் விரிவாக்கப் பணிகளை தொடங்குவதற்காக உள்ளூர் காண்ட்ராக்டர் மற்றும் ஊழியர்கள் சென்றனர். அப்போது அங்கு வந்த ரெட்டி, காண்ட்ராக்டர் மற்றும் ஜேசிபி டிரைவருடன் வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் தனது துப்பாக்கியை காட்டி அவர்களை மிரட்டி உள்ளார்.

இதனையடுத்து காண்ட்ராக்டர் மற்றும் ஊழியர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டனர். பின்னர் இதுபற்றி போலீசில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் ஆயுத சட்டத்தின்கீழ் முன்னாள் அமைச்சர் ரெட்டி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விரைவில் அவர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.

முன்னாள் அமைச்சர் ரெட்டி துப்பாக்கியை காட்டி மிரட்டும்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tags:    

Similar News