செய்திகள்
பீட்சா ஆர்டர்

பீட்சா ஆர்டர் செய்த பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.44 ஆயிரம் அபேஸ்

Published On 2020-08-24 03:32 GMT   |   Update On 2020-08-24 03:32 GMT
பீட்சா ஆர்டர் செய்த பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.44 ஆயிரம் அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
வசாய் :

பால்கர் மாவட்டம் வசாயை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர், சம்பவத்தன்று பீட்சா வாங்க ஆன்லைனில் ஆர்டர் செய்தார். இதற்காக தனது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.359-ஐ பரிமாற்றம் செய்தார். இந்தநிலையில் வெகுநேரமாகியும் பீட்சா வராததால் ஆன்லைனில் இருந்த எண்ணை தொடர்புகொண்டு விசாரித்தார். அப்போது, மறுமுனையில் பேசிய நபர் தன்னை தீபக் சர்மா என்று அறிமுகப்படுத்திக்கொண்டு அந்த பெண்ணிடம் தொழிற்நுட்ப கோளாறு காரணமாக உங்களது ஆர்டர் எங்களுக்கு வந்து சேரவில்லை.

எனவே நீங்கள் செலுத்திய பணம் உங்களுக்கு சில தினங்களில் வந்துவிடும் என கூறி வங்கி கணக்கு விவரங்களை கேட்டுவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

இதன்பின்னர் சில மணி நேரத்தில் அப்பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து தொடர்ச்சியாக ரூ.43 ஆயிரத்து 900 மற்றொரு வங்கிக்கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் மாணிக்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, நூதன முறையில் பெண்ணின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை அபேஸ் செய்த மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி அவரை தேடிவருகின்றனர்.
Tags:    

Similar News