செய்திகள்
மர்மு-வெங்கையா நாயுடு சந்திப்பு

துணை குடியரசுத்தலைவரை சந்தித்தார் காஷ்மீர் முன்னாள் கவர்னர் கிரிஷ் சந்திரா மர்மு

Published On 2020-08-19 10:38 GMT   |   Update On 2020-08-19 10:38 GMT
இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளராக பொறுப்பேற்றுள்ள காஷ்மீர் முன்னாள் கவர்னர் கிரிஷ் சந்திரா மர்மு துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடுவை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி:

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. மேலும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து, யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டு 3 மாதங்கள் கழித்து அக்டோபர் 31 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கு முதல் துணைநிலை கவர்னராக கிரிஷ் சந்திரா மர்மு நியமணம் செய்யப்பட்டார்.

குஜராத் கேடர் ஐஏஎஸ் அதிகாரியான மர்மு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டப்பின் காஷ்மீருக்கு மத்திய அரசால் நியமணம் செய்யப்பட்ட முதல் ஆளுநர் ஆவார்.

9 மாதங்களுக்கு மேலாக காஷ்மீர் கவர்னராக செயல்பட்டுவந்த கிரிஷ் மர்மு கடந்த 5 ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். உயர்பதவி கிடைக்க வாய்ப்பு இருந்ததால் மர்மு தனது பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியிருந்தது.

இதற்கிடையில், மத்திய, மாநில அரசுகளின் வரவு,செலவு கணக்குகளை சரிபார்க்கும் இந்திய அரசின் மிக முக்கிய பொறுப்பான தலைமைக் கணக்குத் தணிக்கையாளராக கிரிஷ் சந்திரா மர்மு நியமணம் செய்யப்பட்டார். 

குடியரசுத்தலைவரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் இந்திய தலைமை கணக்குத்தணிக்கையாளர் பதவியை வகிப்பவரை மத்திய அரசு கட்டுப்படுத்த முடியாது. உச்சநீதிமன்ற நீதிபதிக்கு இணையான அதிகார உரிமையை கொண்டவர் இந்திய தலைமை கணக்குத்தணிக்கையாளர் ஆவார்.

இந்நிலையில், இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளராக பொறுப்பேற்றுள்ள மர்மு இன்று துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.



Tags:    

Similar News