செய்திகள்
ஹாலப்பா ஆச்சார் எம்.எல்.ஏ, சுரேஷ் கவுடா எம்.எல்.ஏ.

கர்நாடகத்தில் மேலும் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-08-03 03:11 GMT   |   Update On 2020-08-03 03:11 GMT
கர்நாடகத்தில் மக்கள் பிரதிநிதிகளையும் கொரோனா தொடர்ந்து தாக்கி வருகிறது. இந்த நிலையில் கர்நாடகத்தில் மேலும் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
பெங்களூரு :

கர்நாடகத்தில் மக்கள் பிரதிநிதிகளையும் கொரோனா தொடர்ந்து தாக்கி வருகிறது. இந்த நிலையில் கர்நாடகத்தில் மேலும் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

கொப்பல் மாவட்டம் எலபுர்கா சட்டசபை தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் ஹாலப்பா ஆச்சார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கொப்பல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சங்கண்ணா கரடி எம்.பி. தலைமையில் கொரோனா தடுப்பு பணி குறித்த கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ.க்கள் பாரண்ணா முனவள்ளி, ராகவேந்திர ஹித்னால் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இதனால் கூட்டத்தில் கலந்து கொண்டு இருந்த ஹாலப்பா ஆச்சார் எம்.எல்.ஏ.வும் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி கொண்டார். இதில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. தனக்கு கொரோனா பாதிப்பு உள்ளதை ஹாலப்பா ஆச்சார் எம்.எல்.ஏ.வும் உறுதிப்படுத்தி உள்ளார்.

இதற்கிடையே நேற்று மதியம் மண்டியா மாவட்டம் நாகமங்களா தொகுதி ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ. சுரேஷ் கவுடாவுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. சுரேஷ்கவுடா எம்.எல்.ஏ. பெங்களூருவில் கொரோனா பரிசோதனை செய்து இருந்தார். அந்த மருத்துவ அறிக்கையின் முடிவில் சுரேஷ்கவுடா எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஹாலப்பா ஆச்சார், சுரேஷ் கவுடாவுடன் சேர்த்து கர்நாடகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்து உள்ளது. 
Tags:    

Similar News