செய்திகள்
பஞ்சாப்பில் விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு
பஞ்சாபில் விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என முதல் மந்திரி அறிவித்துள்ளார்.
சண்டிகர்:
பஞ்சாபில் கடந்த புதன்கிழமை இரவில் விஷ சாராயம் குடித்ததில் பலர் பலியான தகவல் வெளியானது. இதில், அமிர்தசரஸ், படாலா மற்றும் டார்ன்தரன் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் வரை விஷ சாராயம் குடித்து 21 பேர் பலியாகி இருந்தனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில், பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில், பஞ்சாபில் விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 25 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதல் மந்திரி அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.