செய்திகள்
கொரோனா பரிசோதனை

பெங்களூருவில் கொரோனா பாதித்த 3,338 பேர் தவறான முகவரி கொடுத்தது அம்பலம்

Published On 2020-07-27 03:29 GMT   |   Update On 2020-07-27 03:29 GMT
பெங்களூருவில் தற்போது தவறான தகவல் கொடுத்துவிட்டு கொரோனா பாதிப்புக்கு உள்ளான 3,338 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை பற்றிய மற்ற தகவல் கிடைக்காததால் மாநகராட்சியின் சுகாதாரத்துறை ஊழியர்கள் திணறி வருகின்றனர்.
பெங்களூரு :

பெங்களூருவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பெங்களூருவில் தினமும் சராசரியாக 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதுபோல தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரிசோதனைக்கு உள்ளாகும் நபர்கள் தங்களது முகவரி, செல்போன் எண்ணை தவறாக கொடுத்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், பெங்களூருவில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான 3,338 பேர் தவறான முகவரியை கொடுத்திருப்பதாக மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் தெரிவித்துள்ளார். பரிசோதனை மேற்கொள்ளும் போது தங்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்தால், ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுவிடுவார்கள், குடும்பத்தை தனிமைப்படுத்தி விடுவார்கள் என்ற பயத்தில் பலர் தவறான தகவலை கொடுப்பதாக கூறப்படுகிறது.

பெங்களூருவில் தற்போது தவறான தகவல் கொடுத்துவிட்டு கொரோனா பாதிப்புக்கு உள்ளான 3,338 பேர் ஆஸ்பத்திரியில் சரியான சிகிச்சை பெறாமல் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் அனைவரும் எங்கு இருக்கிறார்கள், அவர்களது உடல் நிலை எந்த நிலையில் உள்ளது உள்ளிட்ட எந்த விவரங்களும் மாநகராட்சிக்கு தெரியவில்லை. இவ்வாறு கொரோனா பாதிப்புக்கு உள்ளான நபர்கள் சிகிச்சைக்கு பயந்து வெளியே சுற்றி திரிவதால், பெங்களூருவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதையடுத்து, 3,338 பேரையும் தேடி கண்டுபிடிக்கும் பணியில் மாநகராட்சியின் சுகாதாரத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களை பற்றிய மற்ற தகவல் கிடைக்காததால் ஊழியர்கள் திணறி வருகின்றனர். இது பெங்களூரு நகர வாசிகளிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News