செய்திகள்
ஆளுநருடன் அசோக் கெலாட் (கோப்பு படம்)

நம்பிக்கை வாக்கெடுப்பு இல்லை... சட்டசபையை கூட்ட இரண்டாவது கடிதம் அனுப்பினார் அசோக் கெலாட்

Published On 2020-07-26 10:33 GMT   |   Update On 2020-07-26 10:33 GMT
ராஜஸ்தானில் சட்டசபையை கூட்டும் தேதி மற்றும் சட்டசபையை கூட்டுவதற்கான காரணங்களுடன் இரண்டாது கடிதத்தை ஆளுநருக்கு முதல்வர் அசோக் கெலாட் அனுப்பி உள்ளார்.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையிலான மோதல் பகிரங்கமாக வெடித்தது. இதனால் சச்சின் பைலட்டின் கட்சி பதவி மற்றும் துணை முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. 

தனித்து செயல்பட்டு வரும் சச்சின் பைலட்டை சமாதானம் செய்யும் முயற்சி தோல்வியில் முடிந்தது. எனவே, சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய காங்கிரஸ் தலைமை முடிவு செய்தது. இதற்காக சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.

அதன்பின்னர் சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க திட்டமிட்ட அசோக் கெலாட், சட்டசபையை கூட்டுவதற்கு அனுமதி கேட்டு ஆளுநரிடம் கடிதம் கொடுத்திருந்தார். சட்டசபை கூடும் தேதி, சபையை கூட்டுவதற்காக காரணம் குறித்து குறிப்படப்படாததால் ஆளுநர் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. 

இதனால் அசோக் கெலாட் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆளுநர் மாளிகைக்கு சென்று  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் ஆளுநர் கடும் அதிருப்தி அடைந்தார். அத்துடன் சட்டசபையை கூட்டுவதற்காக காரணம் மற்றும் தேதியுடன் கூடிய புதிய கடிதத்தை அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

அதன்படி புதிய கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பியிருக்கிறார் அசோக் கெலாட். அதில், ஜூலை 31ம் தேதி சட்டசபையை கூட்ட வேண்டும் என்றும், கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் கூறி உள்ளார். அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றி குறிப்பிடப்படவில்லை. எனவே, இந்த முறை ஆளுநர் அனுமதி அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே ராஜஸ்தான் விவகாரத்தில் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்வதாக கூறி காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பாஜக சதியை முறியடிக்க ஜனாதிபதியிடம் செல்வதாகவும் காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது.
Tags:    

Similar News