செய்திகள்
கொரோனாவுக்கு பலி

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டியது: புதிய உச்சமாக 2,228 பேருக்கு வைரஸ் தொற்று

Published On 2020-07-10 04:12 GMT   |   Update On 2020-07-10 04:12 GMT
கர்நாடகத்தில் புதிய உச்சமாக 2,228 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 17 பேர் பலியாகி உள்ளனர். அதே வேளையில் கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
பெங்களூரு :

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கொரோனா தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இதனால் நகரவாசிகள் பீதியடைந்து உள்ளனர்.

இந்த நிலையில் கர்நாடகத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 2,228 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதித்து 17 பேர் உயிரிழந்துள்ளனர். பெங்களூரு நகரில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 1,373 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் பெங்களூருவில் புதிதாக மரணம் நிகழவில்லை. இது சுகாதாரத்துறையினருக்கு சற்று ஆறுதலை அளிப்பதாக உள்ளது. பெங்களூருவில் கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 28 ஆயிரத்து 386 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் புதிதாக 2,228 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் கர்நாடகத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 30 ஆயிரத்து 614 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 12 ஆயிரத்து 833 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் நேற்று மட்டும் 957 பேர் அடங்குவர். இதில் பெங்களூருவில் 606 பேர் ஆவர்.

புதிதாக கொரோனா பாதித்தோரில் பெங்களூரு நகரில் 1,373 பேர், தட்சிண கன்னடாவில் 167 பேர், கலபுரகியில் 85 பேர், தார்வாரில் 75 பேர், மைசூருவில் 52 பேர், பல்லாரியில் 41 பேர், தாவணகெரேயில் 40 பேர், சிவமொக்காவில் 37 பேர், பாகல்கோட்டையில் 36 பேர், கோலாரில் 34 பேர், சிக்பள்ளாப்பூரில் 32 பேர், துமகூருவில் 27 பேர், மண்டியாவில் 24 பேர், உத்தரகன்னடாவில் 23 பேர், உடுப்பியில் 22 பேர், ஹாசனில் 21 பேர், ஹாவேரியில் 18 பேர், ராமநகரில் 17 பேர், யாதகிரி, ராய்ச்சூர், பெங்களூரு புறநகரில் தலா 16 பேர், பீதரில் 15 பேர், சாம்ராஜ்நகரில் 12 பேர், பெலகாவியில் 9 பேர், கதக்கில் 6 பேர், சிக்கமகளூருவில் 5 பேர், குடகில் 4 பேர், கொப்பல், சித்ரதுர்காவில் தலா 2 பேர், விஜயாப்புராவில் ஒருவர் உள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு நேற்று மாநிலத்தில் ஒரே நாளில் 17 பேர் பலியாகியுள்ளனர். இதில், ராய்ச்சூரில் ஒருவர், தார்வாரில் 7 பேர், உத்தரகன்னடாவில் ஒருவர், ஹாசனில் 2 பேர், கலபுரகியில் 2 பேர், மைசூருவில் 2 பேர், துமகூரு, தாவணகெரேயில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கர்நாடகத்தில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 491 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடகத்தில் இதுவரை 7 லட்சத்து 79 ஆயிரத்து 209 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதில் நேற்று மட்டும் 20 ஆயிரத்து 28 மாதிரிகள் அடங்கும். மாநிலத்தில் 64 ஆயிரத்து 447 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 12 ஆயிரத்து 833 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்க்ள.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. வைரஸ் தொற்றால் நடந்துள்ள உயிரிழப்பும் 500-ஐ நெருங்கியுள்ளது. இதனால் மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர். 
Tags:    

Similar News