செய்திகள்
இந்தியாவில் இதுவரை 1.07 கோடி சாம்பிள்கள் சோதனை- ஐசிஎம்ஆர்
இந்தியாவில் கொரோனா வைரசை கண்டறிவதற்காக நேற்று மட்டும் 2.67 லட்சம் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிப்பதில் மத்திய அரசு தொடர்ந்து வேகம் காட்டுகிறது. மேலும் சிறப்பு முகாம்கள், நடமாடும் சோதனை வாகனங்கள் மூலமும் பரிசோதனைகளை நடத்தவும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று பரிசோதிக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதன் பலனாக கொரோனா பரிசோதனை எண்ணிக்கை நாளும் அதிகரித்து உள்ளது. அதேநேரம் நாடு முழுவதும் பரிசோதனைக்கூடங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நேற்று வரை மொத்தம் 1,07,40,832 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், நேற்று மட்டும் 2,67,061 மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தம் 767296 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 21129 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 476378 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 269789 பேர் சிகிச்சையில் உள்ளனர்.