செய்திகள்
முக்தார் அகமது தனது குடும்பத்துடன்

நான் பிழைப்பேன் என நினைக்கவில்லை... 106 வயதை கடந்த முதியவர் நெகிழ்ச்சி

Published On 2020-07-08 15:03 GMT   |   Update On 2020-07-08 15:11 GMT
கொரோனா பாதிப்பில் இருந்து நான் பிழைப்பேன் என நினைக்கவில்லை என 106 வயது முதியவர் பேட்டியில் கூறியுள்ளார்.
புதுடெல்லி:

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டது. வுகான் நகரில் உள்ள உணவிற்கான உயிருடன் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் விற்பனை செய்யும் மார்க்கெட்டில் இருந்து பரவியதாக சீனா தெரிவித்து வருகிறது.  வுகான் மாகாணத்தை தனிமைப்படுத்தி சீனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்தது. ஆனால் உலகின் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி லட்சக்கணக்கான உயிர்களை பறித்து வருகிறது.

கடந்த 1918ம் ஆண்டு உலகம் முழுவதும் 4 கோடி பேர் ஸ்பானிஷ் ப்ளூவுக்கு பலியாகினர் என உலக சுகாதார அமைப்பின் அறிக்கையொன்று தெரிவித்து உள்ளது.  உலக பாதிப்பு எண்ணிக்கையில் 5ல் ஒரு பங்கு மக்கள் இந்தியாவில் பலியாகி இருந்தனர் என நம்பப்படுகிறது.  எனினும், இந்தியாவில் இறப்பு விகிதம் பற்றிய விவாதம் தொடர்ந்தது.

இதேபோன்று, அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், சமீபகால வரலாற்றில், எச்1என்1 வைரசால் ஏற்படும் ஸ்பானிஷ் ப்ளூ கடுமையான நோய் தொற்றாக அறியப்படுகிறது என தெரிவித்து உள்ளது.  கடந்த 102 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட இந்த பாதிப்புக்கு உலகில் 3ல் ஒரு பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இந்தியா முழுவதும் தீவிரமடைந்து வரும் கொரோனா பாதிப்பு நாட்டின் தலைநகர் டெல்லியிலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.  டெல்லியில் வசித்து வரும் முக்தார் அகமது என்ற 106 வயது முதியவருக்கும், அவரது 70 வயது மகனுக்கும் சமீபத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  இதனையடுத்து அவர்கள் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்கள் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

இதனையடுத்து கொரோனா தொற்றிலிருந்து அந்த முதியவர் முழு அளவில் குணமடைந்தார்.   அவரது மகன், மனைவி மற்றும் மற்றொரு குடும்ப உறுப்பினர் என 4 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர்.  இதில் ஆச்சரியம் என்னவென்றால் தனது மகனை விட 106 வயதடை கடந்த அந்த முதியவர் வெகுவிரைவில் குணமடைந்தது அனைவர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

கடந்த 1918ம் ஆண்டு உலகம் முழுவதும் ஸ்பானிஷ் ப்ளூ நோய் பாதிப்பு ஏற்படும்பொழுது, முதியவருக்கு 4 வயது ஆகியிருந்தது.  தற்போது 106 வயதை கடந்த நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்ட பின்னர் அவர் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக உள்ளார்.  அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறும்பொழுது, நான் பிழைப்பேன் என்று நினைக்கவில்லை.  ஆனால், மருத்துவர்களின் முறையான சிகிச்சை கிடைத்ததில் நான் குணமடைந்துள்ளேன்.  எனினும் என்னுடைய வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு நோய்த்தொற்றை ஒருபோதும் கண்டதேயில்லை என கூறியுள்ளார்.
Tags:    

Similar News