செய்திகள்
நேற்று மட்டும் 467 பேர்... இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 20 ஆயிரத்தை கடந்தது
இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2.11 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 9026 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுடெல்லி:
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசுக்கு தினமும் ஏராளமான உயிர்கள் மடிகின்றன. தொடக்கத்தில் சில நூறுகளில் இருந்த தினசரி பாதிப்பு எண்ணிக்கை, தற்போது 20 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி இந்தியாவில் இதுவரை 719665 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 22252 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 467 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20160 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 2.8 சதவீதமாக உள்ளது.
இதுவரை 439948 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 61.1 சதவீதமாக உள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 259557 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 211987 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 9026 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 114978 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1571 பேர் மரணம் அடைந்துள்ளனர். டெல்லியில் 100823 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 3115 பேர் உயிரிழந்துள்ளனர்.
குஜராத்தில் 1960 பேரும், உத்தர பிரதேசத்தில் 809 பேரும், மேற்கு வங்காளத்தில் 779 பேரும், மத்திய பிரதேசத்தில் 617 பேரும், கர்நாடகாவில் 401 பேரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.