செய்திகள்
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

கொரோனாவை சமாளிக்க டெல்லி முழுமையாக தயார் நிலையில் உள்ளது -கெஜ்ரிவால்

Published On 2020-06-26 09:05 GMT   |   Update On 2020-06-26 09:05 GMT
கொரோனா வைரஸ் தொற்றுநோயை சமாளிக்க டெல்லி நகரம் முழுமையாக தயாராக உள்ளது என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறினார்.
புதுடெல்லி:

டெல்லியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொலி வாயிலாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் அளவு திடீரென குறைவது மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. ஆக்சிஜன் அளவு 95 இருக்க வேண்டும். 90க்கு கீழே குறைந்தால் அது ஆபத்து, அதுவே 85க்கு கீழே சென்றால் மிகவும் சீரியஸ், உயிரைக் காப்பாற்றுவது கடினம். சில நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அளவு மிகவும் குறைந்துவிடுகிறது. ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் தென்படுவதில்லை. இதனால் அவர்கள் திடீரென உயிரிழக்க நேரிடுகிறது.

எனவே அறிகுறியற்ற நோயாளிகளுக்கு, அல்லது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட லேசான அறிகுறிகளைக் கொண்டவர்களுக்கு ஆக்சிமீட்டரை வழங்கியுள்ளோம். 

தினமும் கிட்டத்தட்ட 3000 புதிய நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். இருப்பினும், பெரும்பாலானோருக்கு மருத்துவமனை சிகிச்சை தேவை இல்லை என்பதால், மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 13000 படுக்கைகளில் சுமார் 6000 படுக்கைகள் மட்டுமே நிரம்பி உள்ளன. 

பிளாஸ்மா தெரபி சிகிச்சை காரணமாக எல்என்ஜேபி மருத்துவமனையில் உயிரிழப்பு பாதியாக குறைந்துள்ளது. 

வைரஸ் தொற்று அதிகரித்து வந்தாலும், நிலைமை கட்டுக்குள் உள்ளது. கவலைப்பட தேவையில்லை. பரிசோதனை 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.  கொரோனா வைரஸ் தொற்றுநோயை சமாளிக்க டெல்லி முழுமையாக தயார் நிலையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News