செய்திகள்
மல்லிகார்ஜுன கார்கே

மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கொலை மிரட்டல்: மர்மநபருக்கு வலைவீச்சு

Published On 2020-06-10 03:39 GMT   |   Update On 2020-06-10 03:39 GMT
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் விவகாரம் தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மர்மநபர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. பிரவீன்சூட்டிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
பெங்களூரு :

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும், முன்னாள் மத்திய மந்திரியுமாகவும் இருந்து வருபவர் மல்லிகார்ஜுன கார்கே. இவரது மகன் பிரியங்க் கார்கே. இவர் முன்னாள் மந்திரி ஆவார். மல்லிகார்ஜுன கார்கே தனது மகன் மற்றும் குடும்பத்தினருடன் பெங்களூரு சதாசிவநகரில் வசித்து வருகிறார். மேலும் மாநிலங்களவையில் காலியாகும் 4 இடங்களுக்கு வருகிற 19-ந் தேதி நடைபெறும் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், சதாசிவநகரில் உள்ள வீட்டின் தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அப்போது மல்லிகார்ஜுன கார்கே எடுத்து பேசியுள்ளார். எதிர்முனையில் பேசிய மர்மநபர், மாநிலங்களவை தேர்தலில் எதற்காக போட்டியிடுகிறீர்கள் என்று கேட்டு தகாத வார்த்தையில் மல்லிகார் ஜுன கார்கேவை திட்டியுள்ளார். மேலும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மர்மநபர் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

இதுபோல, மல்லிகார்ஜுன கார்கேவின் மகனான பிரியங்க் கார்கேவின் செல்போனுக்கும் ஒரு மர்மநபர் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியுள்ளான். பின்னர் பிரியங்க் கார்கேவையும் மர்மநபர் தகாத வார்த்தையில் திட்டியதுடன், அவருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளான். அந்த மர்மநபர் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசியது தெரியவந்துள்ளது. இதையடுத்து, தனக்கும், தன்னுடைய தந்தைக்கும் வந்த கொலை மிரட்டல் குறித்து போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட்டிடம் பிரியங்க் கார்கே புகார் அளித்துள்ளார்.

மர்மநபர் பேசிய தொலைபேசி எண்ணை டி.ஜி.பி.யிடம் வழங்கியுள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மல்லிகார்ஜுன கார்கே, அவரது மகனுக்கு மிரட்டல் விடுத்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
Tags:    

Similar News