செய்திகள்
பிரியங்கா காந்தி

பயணத்தின்போது 80 பேர் இறந்ததற்கு ரெயில்வே நிர்வாகமே பொறுப்பு- பிரியங்கா குற்றச்சாட்டு

Published On 2020-06-01 06:40 GMT   |   Update On 2020-06-01 06:40 GMT
பயணத்தின்போது 80 பேர் இறந்ததற்கு ரெயில்வே நிர்வாகமே பொறுப்பு என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி:

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்ட ரெயில்களை முறையாக இயக்கவில்லை. அந்த ரெயில்களில் பயணம் செய்த 80 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

நோய் பாதிப்பு இருந்தால் அவர்களை பயணம் செய்ய அனுமதிக்க கூடாது என்று விதிமுறை வகுக்கப்பட்டிருந்தது. ஆனால் ரெயில்வே துறை அதை சரியாக கடைபிடிக்கவில்லை. உரிய பரிசோதனை செய்ய வில்லை.

கடுமையான வெயில் தாக்கம் இருந்த நிலையிலும் ரெயில் பயணிகளுக்கு தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் சரியாக செய்து தரப்பட வில்லை. இதுபோன்ற காரணங்களால் தான் 80 பேர் வரை உயிரிழந்திருக்கிறார்கள்.

இதற்கு ரெயில்வே நிர்வாகம் பொறுப்பற்று செயல்பட்டதே காரணம் ஆகும். அதுமட்டுமல்ல 40 சதவீத ரெயில்கள் மிகவும் தாமதமாக சென்றிருக்கின்றன. பல ரெயில்கள் குறிப்பிட்ட பாதைக்கு பதிலாக வேறு பாதையில் சென்றிருக்கின்றன.

ரெயில்வே துறை சரியாக திட்டமிடாமல் செயல்பட்டதே இதற்கு காரணம். உத்தரபிரதேசத்தில் இப்போதும் கூட ஏராளமான தொழிலாளர்கள் நடந்தே தங்கள் ஊர்களுக்கு சென்று வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான வசதிகளை மாநில அரசு ஏற்படுத்திக் கொள்ளவில்லை. பசியாலும், பட்டினியாலும் அவர்கள் நடந்து செல்கிறார்கள். மத்திய மாநில அரசுகள் இதுபோன்ற மக்களை கைவிட்டு விட்டன.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News