செய்திகள்
பாகிஸ்தான் விமான விபத்து: பிரதமர் மோடி இரங்கல்
பாகிஸ்தான் நாட்டில் இன்று நடந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் இருந்து கராச்சி நோக்கி இன்று பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் 91 பயணிகள் 8 விமான ஊழியர்கள் உள்பட மொத்தம் 99 பேர் பயணித்தனர்.
விமானம் கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்தபோது எதிர்பாராத விதமாக எஞ்சின் மற்றும் லேண்டிங் கியரில் கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானநிலையத்திற்கு அருகே இருந்த குடியிருப்பு பகுதியில் விமான விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 95-க்கும் அதிகமானோர் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 பயணிகள் மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் விமான விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''பாகிஸ்தான் நாட்டில் நடந்த விமான விபத்தில் பலர் உயிரிழந்திருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம்’’ என தெரிவித்துள்ளார்.