செய்திகள்
கோப்பு படம்

மாநிலங்கள் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும்: மத்திய உள்துறை அமைச்சகம்

Published On 2020-05-21 15:28 GMT   |   Update On 2020-05-21 15:28 GMT
பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாநில அரசுகள் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
புதுடெல்லி:

கொரோனாவை விரட்ட இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு நான்கு கட்டங்களாக அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் 4-வது கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது.

பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. பொது போக்குவரத்து குறித்து அந்தந்த மாநிலங்கள் முடிவு எடுத்துக் கொள்ளலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.



ஆனால் பொது இடங்களில் மக்கள் அதிகமான அளவில் கூடுவதை தவிர்க்கும் வகையில் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. மேலும், கட்டுப்பாட்டு பகுதியில் கடைபிடிக்க வேண்டியது குறித்து மாநில அரசுகளுக்கு விரிவான வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தது.

தற்போது பெரும்பாலான இடங்களில் இந்த வழிகாட்டுதல்கள் மீறப்படுவதாக தகவல்கள் வந்துள்ளன எனத் தெரிவித்துள்ள உள்துறை அமைச்சகம், மாநிலங்கள் கண்டிப்பாக வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

மேலும், ‘‘அத்தியாவசிய தேவைகளைத் தவிர மற்ற நடவடிக்கைகள் மாலை 7 மணி முதல் காலை 7 மணி வரை இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும். கட்டுப்பாட்டு மண்டலங்கை முறையாக வரையறுத்து, கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்த வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளது.
Tags:    

Similar News