செய்திகள்
கொரோனாவுடன் வாழ டெல்லி மக்கள் தயாராக வேண்டும் - அரவிந்த் கெஜ்ரிவால்
கொரோனாவுடன் வாழ மக்கள் தயாராக வேண்டும் என்று டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைநகர் டெல்லியில் காணொலி காட்சி வாயிலாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
டெல்லியில் உள்ள 11 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை மட்டுமே சிவப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும், ஒட்டுமொத்த மாவட்டத்தையும் அறிவிக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு பரிந்துரை விடுப்போம்.
கொரோனா பாதிப்பே இல்லை என்ற நிலை தற்போது வருவது சாத்தியமில்லாதது. ஏனெனில், நாடு முழுவதும் அப்படி ஒரு நிலை இல்லை. கொரோனா வைரசுடன் வாழ தயாராக வேண்டும். டெல்லி முழுவதையும் சிவப்பு மண்டலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக சந்தைகள், மால்களை திறக்க முடியாது.
கடைகள் மூடப்பட்டுள்ளதால் வர்த்தகர்கள் மற்றும் தொழிற்சாலைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. வேலை இழந்தவர்கள் நகரத்தை விட்டு வெளியேறுகிறார்கள். இன்னும் பலர் இங்கிருந்து வெளியேற விரும்புகிறார்கள். நீண்ட நாள்களுக்கு டெல்லியால் இந்தப் பிரச்சனையைத் தாங்க முடியாது.
பொது இடங்களில் எச்சில் துப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாலை 7 மணி முதல் காலை 7 மணி வரை மக்கள் நடமாட அனுமதி கிடையாது. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் நாளை முதல் செயல்படும். ஆனால், விமானம், மெட்ரோ, பேருந்து போக்குவரத்து ரத்து நீடிக்கும் என தெரிவித்தார்.