செய்திகள்
55 வயதுக்கு மேற்பட்ட போலீசார் விடுப்பில் செல்லுங்கள்- மும்பை காவல்துறை அறிவுறுத்தல்
மும்பை காவல்துறையில் பணியாற்றும் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் ஏற்கனவே நோய்த் தாக்கம் உள்ளவர்கள் விடுப்பில் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மும்பை:
இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8590 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 369 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தடுப்பு பணியில் முன்வரிசையில் நின்று களப்பணியாற்றும் காவல் துறையிலும் பலருக்கு கொரோனா பரவி உள்ளது. மகாராஷ்டிராவில் இதுவரை காவல்துறையைச் சேர்ந்த 107 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் மும்பை காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.
மும்பையில் மட்டும் கடந்த 3 நாட்களில் 3 போலீஸ்காரர்கள் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனையடுத்து, மும்பை காவல்துறையில் பணியாற்றும் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் முன்பே நோய்த்தாக்கம் உள்ளவர்கள் விடுப்பில் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இறந்துபோன 3 போலீஸ்காரர்களும், மருத்துவமனையில் உள்ள போலீஸ்காரர்களும் 55 வயதைக் கடந்தவர்கள். இதனை கருத்தில் கொண்டு, 55 வயதுக்கு மேற்பட்ட போலீஸ்காரர்கள் மற்றும் அதிகாரிகளை பாதுகாக்கும் வகையில் விடுப்பில் செல்லும்படி கூறப்பட்டுள்ளது.