செய்திகள்
கொச்சி விமான நிலையத்தில் சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள்

சுவிட்சர்லாந்தை சேர்ந்த 164 பேர் இந்தியாவில் இருந்து சொந்த நாடு புறப்பட்டனர்

Published On 2020-04-26 11:54 GMT   |   Update On 2020-04-26 12:33 GMT
இந்தியாவில் சிக்கித் தவித்த சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த 164 பேர் நேற்று சிறப்பு விமானம் மூலம் சொந்த நாடு புறப்பட்டனர்.
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தை தடுக்கும் நடவடிக்கைக்காக இந்தியாவில் கடந்த மாதம் 25-ந்தேதியில் இருந்து ஏப்ரல் 14-ந்தேதி வரை 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த காலக்கட்டத்திற்குள் கொரோனா தொற்று கட்டுக்குள் வரவில்லை. இதனால் மே 3-ந்தேதி வரை மேலும் 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

இதனால் வெளிநாட்டில் உள்ள இந்தியர்களும், இந்தியாவில் உள்ள வெளிநாட்டினரும் அவர்களுடைய சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. பெரும்பாலான நாடுகள் இந்தியாவில் சிக்கியுள்ள தங்களது நாட்டினரை அனுப்பி வைக்க இந்தியாவிடம் உதவி கேட்டது. இந்திய அரசும் அவர்களை சொந்த நாடு அனுப்ப உதவி புரிந்து வருகிறது.

சுவிட்சர்லாந்தை சேர்ந்த 164 பேர் இந்தியாவில் சிக்கியிருந்தனர். அவர்களை சொந்த நாட்டிற்கு அழைத்துச் செல்ல அந்நாடு முயற்சி செய்தது. நேற்று 164 பேரும் கொச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அங்கிருந்து இரவு 11.10 மணிக்கு சுரிச் விமான நிலையத்திற்கு அவர்கள் ஸ்விஸ் ஏர் விமானம் மூலம் புறப்பட்டு சென்றனர்.

சுவிட்சர்லாந்து புறப்பட்டுச் சென்ற அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. யாருக்கும் அறிகுறி இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
Tags:    

Similar News