செய்திகள்
சமூக விலகல் மந்திரத்தை வழங்கும் இந்திய கிராமங்கள்-மோடி பெருமிதம்
சமூக விலகல் என்பதை எளிமையாக வரையறுக்க, ‘2 அடி விலகியிரு’ என்ற மந்திரத்தை கிராமங்கள் நமக்கு வழங்கியிருப்பதாக பிரதமர் மோடி பேசினார்.
புதுடெல்லி:
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதிலும் உள்ள பஞ்சாயத்து தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
அப்போது கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் தடுப்பு பணிகள் தொடர்பாக மோடி பேசியதாவது:-
கொரோனா வைரஸ் பரவல் அனைவருக்கும் படிப்பினையாக அமைந்துள்ளது. நாம் சுய சார்புடையவர்களாக மாற வேண்டும் என்று கற்பித்திருக்கிறது. கோரோனா வைரஸ் பரவல் நாம் அனைவரும் வேலை செய்யும் முறையையே மாற்றிவிட்டது. நாம் எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்பதை கொரோனா பரவல் சுட்டிக்காட்டி உள்ளது.
கொரோனா வைரசை எதிர்த்து போராடுவதற்கு, சமூக விலகல் என்பதை எளிமையாக வரையறுக்க, ‘2 அடி விலகியிரு’ என்ற மந்திரத்தை கிராமங்கள் நமக்கு வழங்கி உள்ளன. தனி நபர் இடைவெளி மூலம் இந்தியா கொரோனாவை எப்படி கட்டுப்படுத்துகிறது என்பதை உலகமே உற்று நோக்குகிறது
இவ்வாறு அவர் பேசினார்.